Select your language

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆங்கில பாடத்திற்கான பட்டதாரி ஆசிரியராக

பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் தமிழ் பாடப்பிரிவில் பிஎட் படிப்பை முடித்த பிறகு தொலைதூரக் கல்விமுறையின் கீழ் மனுதாரர் பி.ஏ ஆங்கிலம் படித்தால் பதவி உயர்வுக்கு தகுதி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது.


இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழ் பாடத்திற்கான இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு மனுதாரரை பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டார். மேலும் கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.


இட ஒதுக்கீட்டின்கில் நியமனம் மேற்கொள்வதாக இருந்தாலும் கூட, தகுதியானவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என தெரிவித்திருக்கக்கூடிய நீதிபதி, தற்போது ஆசிரியராக உள்ள பெரும்பாலானோர் கல்லூரிகளுக்கு நேரில் சென்று படிக்காதவர்களாக இருப்பது துரதிஷ்டவசமானது என வேதனையும் தெரிவித்துள்ளார். அகில இந்திய அளவில் கல்வியின் தரத்தில் தமிழகம் 27-வது இடத்தில் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி,
கல்விக்கு 36,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், பெருந்தொகை ஆசிரியர்கள் ஊதியத்துக்கே செலவிடப்படுவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

நீதிமன்றத்தின் அழைப்பை ஏற்று நேரில் ஆஜராகிய தமிழக தொடக்க கல்வி இயக்குனர் தாக்கல் அறிக்கையில்,
கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிப்பதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். இதனை சுட்டிக்காட்டி நீதிபதி, ஆசிரியர் நியமனம் தொடர்பான சட்டத்தை மூன்று மாதத்திற்குள் மறு ஆய்வு செய்ய பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்திருக்கிறார்.